டுவிட்டர் செயலியை வாங்குவதில் முறைகேடு: எலான் மஸ்க் மீது வழக்கு

டுவிட்டர் செயலியை வாங்கியதில் 150 மில்லியன் டாலர் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டுவிட்டர் செயலியை வாங்குவதில் முறைகேடு: எலான் மஸ்க் மீது வழக்கு
Published on

வாஷிங்டன்,

பிரபல தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், 2022-ம் ஆண்டில், சமூக ஊடகமான டுவிட்டர் செயலியை (தற்போது எக்ஸ்) வாங்கப்போவதாக 2022, ஏப்ரல் 4ம் தேதி அறிவித்தார். இதனையடுத்து, டுவிட்டர் செயலியின் பங்கு மதிப்பு 27 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே, டுவிட்டரின் 5 சதவிகிதப் பங்குகளை எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.

அமெரிக்க சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் வாங்கினாலோ வைத்திருந்தாலோ, அதுகுறித்த தகவலை 10 நாட்களுக்குள் சட்டபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால், எலான் மஸ்க் டுவிட்டரின் பங்குகளை வாங்கிய 11 நாட்களுக்குப் பின்னர்தான் அதனை அறிவித்தார். இந்த தாமதமான அறிவிப்பால் 150 மில்லியன் டாலர் குறைவாக செலுத்தி, குறைந்த விலையில் டுவிட்டர் செயலியை வாங்க வழிவகுத்தது. இருப்பினும், டுவிட்டர் பங்குகளை வைத்திருந்த மற்றவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) கூறியது.

இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்க்கின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன்படி எலான் மஸ்க் பெற்ற தொகையைத் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், கூடுதல் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் அபராதம் மட்டுமே அவருக்கு விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

எலான் மஸ்க் 2022 அக்டோபரில் டுவிட்டரை சுமார் 44 பில்லியன் டாலர்களுக்கு கையகப்படுத்தினார். இந்தத் தொகையில் பெரும்பகுதி அவர் தலைமையிலான மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிதியளிக்கப்பட்டது. மஸ்க் மொத்தம் 12 பில்லியன் டாலர்கள் கடன்களையும் பெற்றார். கையகப்படுத்தலுக்குப் பிறகு, அவர் டுவிட்டரை தனது ஆன்லைன் தளமான எக்ஸ் என்று மறுபெயரிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com