உக்ரைன் போர்: முதல் முறையாக நேட்டோ அமைப்பின் சிறப்பு படை களமிறக்கம்

உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 40 ஆயிரம் வீரர்களை கொண்ட சிறப்பு படையை முதல் முறையாக நேட்டோ களமிறக்கியுள்ளது.
உக்ரைன் போர்: முதல் முறையாக நேட்டோ அமைப்பின் சிறப்பு படை களமிறக்கம்
Published on

பிரஸல்ஸ்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் உக்ரைனுடன் எல்லையை பகிர்கின்றன. போலாந்து, ஸ்லொவாகியா, ஹங்கேரி, ரூமெனியா ஆகிய நாடுகள் உக்ரைனுடன் எல்லையை பகிரும் நேட்டோ நாடுகளாகும்.

இதனால், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் நேட்டோ படையை நேரடியாக போருக்குள் இழுக்கமால் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில், நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஷியாவின் நோக்கம் உக்ரைனுடன் நின்றுவிடாது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்ரைன் மீதானது மட்டுமல்ல. இது உக்ரைனில் உள்ள அப்பாவி மக்கள் மீதான பேரழிவு தரும் பயங்கரமான தாக்குதல். ஆனால், இது முழு ஐரோப்பிய பாதுகாப்பின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

ஆகையால் தான் நாங்கள் இந்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நேட்டோ அமைப்பின் சிறப்பு படை கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகளின் எல்லைகளில் உடனடியாக நிலைநிறுத்தப்படுகிறது என்றார். தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படைகளும் களமிறக்கப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பு களமிறக்கியுள்ள சிறப்பு படையின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரம் வீரர்கள் ஆகும். ஆனால், அதில் எத்தனை வீரர்கள் கிழக்கு ஐரோப்பாவின் உக்ரைன் எல்லையில் உள்ள நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை. நேட்டோ அமைப்பின் வரலாற்றில் சிறப்பு படை களமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com