

வாஷிங்டன்,
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதியருக்கு 4-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு 'அலெக் நீல் வான்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஈவான், விவேக் ஆகிய 2 மகன்களும், மிராபெல் என்ற ஒரு மகளும் உள்ளனர்.
4-வது குழந்தை
இந்த நிலையில், உஷா வான்ஸ் மீண்டும் கர்ப்பமடைந்தார். அவரை பிரசவத்திற்காக மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மேலும் சிகிச்சையளித்த வால்டர் ரீட் மருத்துவமனை மருத்துவர்களுக்கும். வெள்ளை மாளிகை மருத்துவ குழுவுக்கும் ஜே.டி.வான்சும், அவரது மனைவியும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளனர்.
தனக்கு 4-வது குழந்தை பிறந்திருப்பது குறித்து துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தன்னுடைய 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சகோதரனை வரவேற்ற குழந்தைகள்
எனக்கும், உஷாவிற்கும் 4-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு 'அலெக் நீல் வான்ஸ்' என்று பெயரிட்டுள்ளோம். தற்போது உஷாவும், குழந்தையும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளனர். எங்களது மற்ற 3 குழந்தைகளும் தங்களுடைய கடைக்குட்டி சகோதரனை மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றனர்."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
திருமணம்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தை சேர்ந்தவர் உஷா. வான்ஸ் -உஷா இருவரும் யாலே சட்டப் பள்ளியில் படித்தபோது, நட்பாக பழகினர். 2013-ம் ஆண்டு பட்டம் பெற்று அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இந்து முறைப்படியும், கத்தோலிக்க முறைப்படியும் நடந்தது.
குழந்தை பிறந்தது பற்றி வெள்ளை மாளிகையில் பேசிய ஜே.டி.வான்ஸ். 'துணை அதிபர் ஆவதற்கு முன்பே, நான் உஷாவிடம், எனக்கு 4-வதாக ஒரு குழந்தை வேண்டும் என்று சொன்னேன்.
அதற்கு அவர் சரி, ஆனால் நீங்கள் அமெரிக்காவின் துணை அதிபராகலாம் அல்லது நான்காவது குழந்தையை பெற்று கொள்ளலாம். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்று பதில் அளித்தார். நல்ல வேளை எனக்கு இந்த இரண்டுமே கிடைத்து இருக்கிறது' என்று சிரித்த படியே கூறினார்.
150 ஆண்டு கால வரலாறு அமெரிக்க வரலாற்றில், பதவியில் இருக்கும் ஒரு துணை அதிபருக்கு குழந்தை பிறப்பது கடந்த 150 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு கடந்த 1870-ம் ஆண்டு அப்போதைய துணை அதிபர் ஷூய்லர் கோல்பேக்ஸ் பதவியில் இருந்தபோது அவருக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தம்பதியருக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.