ஆபரேசன் சாகர்பந்து... பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கையில் மீட்பு

இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆபரேசன் சாகர்பந்து... பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கையில் மீட்பு
Published on

புதுடெல்லி,

இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது.

புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் மற்றும் அந்த கப்பலில் இருந்து புறப்பட்டு சென்ற சேதக் ஹெலிகாப்டர்கள், இந்திய விமான படையின் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர்கள் ஆகியவை இலங்கை விமான படையுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

புயல் பாதிப்பு செய்தியை தொடர்ந்து, இந்திய கடற்படையின் 2 கப்பல்களில் 9.5 டன்கள் நிவாரண பொருட்கள் உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டன. இதுதவிர, இந்திய விமான படையின் 3 விமானங்கள் 31.5 டன்கள் அளவிலான நிவாரண பொருட்களையும், இதன்பின்னர் சுகன்யா கப்பலில் 12 டன்கள் நிவாரண பொருட்கள் என மொத்தம் 53 டன்கள் நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்துள்ளன.

ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் இருந்து புறப்பட்டு சென்ற சேதக் ஹெலிகாப்டர்கள், இந்திய விமான படையின் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர்கள் ஆகியவை இலங்கை விமான படையுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கர்ப்பிணிகள், முதியவர்கள் என பலர் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மூலம் ஜெர்மனி, சுலோவேனியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, போலந்து, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பெலாரஸ், ஈரான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் மீட்கப்பட்டு உள்ளனர். 1,500 இந்தியர்கள் முன்பே மீட்கப்பட்டு விட்டனர். இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மூலம் இலங்கையில் இருந்து பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com