

இஸ்லமாபாத்,
ஐநா அமைப்பால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வருவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் லாகூர் அருகே ஹபீஸ் சயீத் இல்லம் உள்ளது. பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த இல்லத்தின் கடந்த மாதம் 23 ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 24 பேர் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக அங்குள்ள கார் மெக்கானிக் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான ரா காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் கூறுகையில், பாகிஸ்தானில் கடந்த 23 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் இந்தியர் என்பதும் இந்தியாவின் உளவு அமைப்பான ரா வுடன் அவர் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த ஒட்டு மொத்த தாக்குதலும் இந்திய ஆதரவுடன் நடைபெற்றது என்பதை எந்த சந்தேகமும் இன்றி கூற முடியும் என்றார். ஆனால், இது தொடர்பாக எத்தகைய உளவுத்தகவல்கள் கிடைத்தது என்பன போன்ற எந்தத் தகவலையும் மொயித் யூசுப் தெரிவிக்கவில்லை.