பாகிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 16 வீரர்கள் பலி; 29 பேர் காயம்

பாகிஸ்தானில் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை ஆயுத குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் 290 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 16 வீரர்கள் பலி; 29 பேர் காயம்
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றை ஓட்டி வந்த தற்கொலைப்படையை சேர்ந்த நபர் ஒருவர், அதன் மீது மோதி தாக்குதல் நடத்தினார்.

இந்த சம்பவத்தில், ராணுவ வீரர்கள் 16 பேர் பலியானார்கள். 10 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 19 பேர் என மொத்தம் 29 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 வீரர்களின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.

இந்த தாக்குதலில், 2 வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்தன. 6 குழந்தைகள் காயமடைந்தனர். பாகிஸ்தான் தலீபானின் கிளை அமைப்பான ஹபீஸ் குல் பகதூர் என்ற ஆயுத குழுவின் தற்கொலைப்படை அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது.

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஆயுத குழுக்கள் நடத்தி வரும் தாக்குதல்களில் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 290 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பலர் ராணுவ வீரர்கள் ஆவர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com