

இஸ்லாமாபாத்,
சமீபத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே சண்டை நடந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், ராணுவ வீரர்களுடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குர்ரம் பகுதிக்கு சென்றார். அங்கு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார். ராணுவ வீரர்களுடன் உரையாடினார். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் நடவடிக்கையில் அவர்களின் சாதனைகளை பாராட்டினார்.
ராணுவ வீரர்களிடம் அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் அமைதியை குலைப்பதை பாகிஸ்தான் அனுமதிக்காது. அதுபோல், பாகிஸ்தானுக்கு எதிரான காரியங்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.