முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு - பாகிஸ்தான் ராணுவம் இரங்கல்!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பாகிஸ்தான் ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு - பாகிஸ்தான் ராணுவம் இரங்கல்!
Published on

இஸ்லாமாபாத்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண் சிங் மட்டும் உயிர் தப்பினார். படுகாயமடைந்துள்ள அவரும் கவலைக்கிடமான முறையில் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியான பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்திருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. அத்துடன் மத்திய அரசுக்கும், முப்படையினருக்கும் பெரும் அதிர்ச்சியையும் கொடுத்து உள்ளது.

இந்நிலையில், இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளின் விலைமதிப்பில்லா உயிர்களின் மறைவிற்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் நதீம் ராசா மற்றும் ஜெனரல் காமர் ஜாவத் பாஜ்வா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த தீவிரவாத பயிற்சி மையத்தை குறிவைத்து இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்திய போது இந்திய ராணுவ தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்க ராணுவம் இரங்கல் தெரிவித்தது. அவரை அமெரிக்காவின் மதிப்புமிக்க கூட்டாளியாகவும் நண்பராகவும் பார்த்தேன் என்று அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com