

ஜெனீவா,
ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் ஒரு "கூட்டு அறிக்கையை" சமர்ப்பித்துள்ளது. இதில் சுமார் 60 நாடுகள் தங்களை ஆதரிப்பதாக கூறி உள்ளது. ஆனால் பகிரங்கமாக அடையாளம் காட்டவில்லை.
இந்த அறிக்கையின் உரை செவ்வாயன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட பின்னர் வெளியுறவு அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, ஆனால் பாகிஸ்தான் அதை ஆதரிக்கும் நாடுகளை அடையாளம் காட்டவில்லை.
இந்த நாடுகளின் பட்டியல் இந்திய தூதுக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பாகிஸ்தான் தூதுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் அதுமாதிரி ஒன்றும் நடக்கவில்லை.
இந்த அறிக்கையில் 57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்தோனேசியா போன்ற பல இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தூதர்கள் தங்கள் இந்திய சகாக்களுடன் தொடர்பு கொண்ட போது இந்த நடவடிக்கையிலிருந்து தாங்கள் தூர விலகிக் கொண்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பட்டியல் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதனால் ஏதோ விவகாரம் இருக்கிறது. நாடுகளை தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் கூறி இருக்கலாம், ஆனால் அந்த நாடுகள் இந்த பிரச்சினை குறித்து பகிரங்கமாக எதுவும் பேசவில்லை என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் காஷ்மீர் குறித்து ஒரு தீர்மானத்தை முன்வைக்க அல்லது "அவசர விவாதத்திற்கு" பாகிஸ்தானின் முயற்சிகளை இந்தியத் தரப்பு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. பாகிஸ்தான் அவர்களுக்கு ஆதரவாக நாடுகளை திரட்டமுடியாது என இந்திய தரப்பில் நம்பப்படுகிறது.
ஒரு தீர்மானம் அல்லது அவசர விவாதத்திற்கு உறுப்பினர்களில் ஒரு எளிய பெரும்பான்மை ஆஜராகி வாக்களிக்க வேண்டும். வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் கலந்து கொள்ள மாட்டார்கள். அதனால் அது மேலும் குறையும் என ஒரு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது :-
ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 47 உறுப்பினர்களைக் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கொண்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் நாட்டின் நிலைப்பாட்டை ஆதரிப்பதற்காக இந்திய தூதர்கள் முக்கிய தலைநகரங்களில் ஒரு விரிவான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
உறுப்பினர்களில், சீனாவும் பாகிஸ்தானும் மட்டுமே தங்கள் அறிக்கைகளில் காஷ்மீர் பிரச்சினையை குறிப்பிட்டுள்ளன. மற்றவர்கள் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இது இந்தியாவின் நிலைப்பாட்டைப் பற்றிய அதிக புரிதலை பிரதிபலிக்கிறது.
காஷ்மீர் மக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், தகவல் தொடர்பு நிறுத்தப்படுவதை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும். அரசு படையை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கான அணுகல் மற்றும் ஒரு அமைப்பை அமைத்தல் உள்பட உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க உலக சமூகம், ஐ.நா. விசாரணை ஆணையத்தை கேட்டு கொண்டுள்ளது என கூறினார்.