

இஸ்லாமாபாத்,
தெற்காசியாவின் எட்டு நாடுகளுக்கிடையே உருவாக்கப்பட்ட சார்க் அமைப்பில் வங்காள தேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் சார்க் மாநாடு 2014ம் ஆண்டுக்கு பின் நடைபெறவில்லை. பின் 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருந்த மாநாடு, ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் இந்திய ராணுவப் படைகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் காரணமாக ரத்தானது.
அதன்பின் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டில், தலீபான்கள் ஆப்கானிஸ்தான் பிரதிநிதியாக கலந்துகொள்ள பாகிஸ்தான் விரும்பியதாக தகவல்கள் வெளிவந்தன. இந்தியா மற்றும் சில உறுப்பு நாடுகள் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், இதுபற்றிய ஒருமித்த கருத்து இல்லாததாலும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், சார்க் மாநாட்டை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏசலா ரூவான் வீரகூன் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேசினார். பின், பிரதமர் இம்ரான் கானை, சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர் சத்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கூறியதாவது,
சார்க் மாநாட்டை நடத்தக்கூடாது என்பதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட தடைகள் அனைத்தும் தூக்கி எறியப்படும்.
சார்க் மாநாட்டால் உறுப்பு நாடுகளுடன் பரஸ்பர நன்மை உண்டாகும். உறுப்பு நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பை உருவாக்கவும் இந்த மாநாடு நடத்தப்பட வேண்டும்.
மேலும், பருவநிலை மாற்றம், கல்வி, வறுமை ஒழிப்பு, ஆற்றல் ஒருங்கிணைப்பு மற்றும் சுகாதார சவால்கள் போன்ற பொதுவான நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒத்துழைப்பு தர பாகிஸ்தான் தயாராக உள்ளது.
இந்த மாநாடு தெற்காசிய மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றும் என்றும், பாகிஸ்தானின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தியும் இம்ரான் கான் பேசினார்.