

இஸ்லமாபாத்,
பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மம்னூன் ஹூசைன். இவரது பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 9-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.இதையொட்டி, அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி நாளைய தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. அனைத்து மாகாண சபைகளிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பதவிக்கான போட்டியில், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் ஆரிஃப் அல்வி, பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் சவுத்ரிஅட்சாஸ், ஜமைத் இ உலேமே கட்சி சார்பில் மவுலானா பசல் உர் ரெகுமான் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
எனினும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைசேர்ந்த ஆரிப் அல்வியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கராச்சியை சேர்ந்த அல்வி, பல்மருத்துவம் பயின்றவர் ஆவார். தனது அரசியல் காலத்தில் எப்போதும், இம்ரான்கானுக்கு துணையாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது.