

சியோல்,
தென்கொரியாவில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் பார்க் கியுன் ஹை. இவரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாம்சங் உள்பட பெரும் நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று ஊழலில் ஈடுபட்டார். இந்த ஊழலில் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு நேரடி பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு எதிராக நாட்டில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டு நாடாளுமன்றம் பார்க் கியுன் ஹைவிடம் இருந்து அதிபர் பதவியை பறித்தது. அதனை தொடர்ந்து, பார்க் கியுன் ஹை மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன் பின்னர் நடந்த தேர்தலில் மூன் ஜே இன் வெற்றி பெற்று அதிபரானார்.
ஊழல் வழக்கில் சுமார் 5 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக கடந்த டிசம்பர் மாதத்தில் தென்கொரியா அரசு அறிவித்தது.
சிறையில் இருந்து விடுதலை பெற்ற பார்க் கியுன் ஹை கடந்த மூன்று மாதங்களாக மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.