காசாவை விட்டு பாலஸ்தீனியர்கள் வெளியேற திட்டம் வகுக்கப்படும்: இஸ்ரேல் மந்திரி


காசாவை விட்டு பாலஸ்தீனியர்கள் வெளியேற திட்டம் வகுக்கப்படும்:  இஸ்ரேல் மந்திரி
x

பாலஸ்தீனியர்கள் நிலம் வழியாக வேறு இடங்களுக்கு வெளியேறி செல்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மந்திரி இன்று கூறினார்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கானது பல வருடங்களாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை ஹமாஸ் அமைப்பினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த சூழலில், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது.

இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்துள்ளது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது.

ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், காசாவில் இருந்த பாலஸ்தீனியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் இன்று கூறும்போது, பாலஸ்தீனியர்கள் நிலம் வழியாக வேறு இடங்களுக்கு வெளியேறி செல்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என்றார். அவர்கள், கடல் மற்றும் வான் வழியாகவும் வெளியேறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதற்காக திட்டங்களை வகுக்கும்படி இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். காசாவில் இருந்து பெருமளவிலான மக்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிப்பதற்கான டிரம்ப்பின் தைரியம் வாய்ந்த திட்டத்திற்கு அவர் வரவேற்பும் தெரிவித்து உள்ளார்.

எனினும், பாலஸ்தீனியர்கள் காசாவுக்கு என்றேனும் ஒரு நாள் திரும்பி வருவது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. காசாவை அமெரிக்கா மறுகட்டமைப்பு செய்ய உள்ளது என டிரம்ப் நேற்று கூறியதுடன், காசாவிலுள்ள மக்கள் உலகின் பிற நாடுகளில் நிரந்தர குடியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

எனினும், அமெரிக்க அதிகாரிகள் இந்த இடமாற்றம் தற்காலிக அடிப்படையிலானது என்று பின்னர் தெரிவித்தனர். ஆனால், காசாவுக்கு திரும்பி வருவதற்கு இஸ்ரேல் ஒருபோதும் தங்களை அனுமதிக்காது என்று பாலஸ்தீனியர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

டிரம்ப்பின் திட்டம் பாலஸ்தீனியர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் பலரால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் இதனை ஏற்க மறுத்து விட்டனர். இதனை, சர்வதேச சட்டங்களை மீறி கட்டாயப்படுத்தி ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலானது என உரிமை குழுவினர் கூறியுள்ளனர்.

1 More update

Next Story