

கீவ்
உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர். 35 பேர் காயம் அடைந்தனர்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே தீவிர மோதல் நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தாக்குதலில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். வீரர்கள், பொதுமக்கள் என பலரும் காயமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் பொதுமக்கள் 8 பேர் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ஓடெசா மற்றும் சபோரி ஷியா நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்ததில் 35-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக ரஷியாவின் ரசாயன ஆலைகள் மீது உக்ரைனும் தாக்குதல் நடத்தியுள்ளது. தீவிர தாக்குதலின் ஒரு பகுதியாக, உக்ரைன் மற்றும் போலந்து நாட்டு எல்லை பகுதியருகே உள்ள ரெயில்வே கிராசிங் பகுதியில் ரஷியா, டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ரெயில் ஒன்றை அதிகாரிகள் நிறுத்தினர்.
அந்த ரெயிலில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்சின் ஆலோசகர் கன்தர் சாவ்டர், சுவீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட், ஐரோப்பிய பாதுகாப்பு ஆலோசகர், தூதர்கள் மற்றும் ஜெர்மன் நாட்டு எம்.பி.க்கள் அந்த வழியே சிறப்பு ரெயிலில் பயணித்து கொண்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அவர்கள் டிரோன் தாக்குதலில் இருந்து தப்பி விட்டனர்.