உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தியது ரஷியா

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
மாஸ்கோ,
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022ஆம் ஆண்டு ரஷியா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டிருப்பதால், ஏராளமான உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. அதோடு கடுமையான பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும், உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற புதின், “உக்ரைன் உடனான போரை பேச்சு மூலம் நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது” என்றார். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷிய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து பேசத் தயாராக இருப்பதாகவும், ஆனால் உறுதியான முடிவுகளை தரும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே பேச்சுக்கு தயார் எனவும் தெரிவித்தார்.
ஆனால், பேச்சுக்கான இடமாக மாஸ்கோவை ஏற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார். இதன் தொடர்ச்சியாக, உக்ரைன் உடனான அமைதி பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் தலையீடு அதிகமாக உள்ளதால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.






