

வில்னியஸ்,
உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டின் அதிபர் கிதானாஸ் நாசேடா அறிவித்துள்ளார். உக்ரைன்-ரஷியா இடையிலான போர் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையில் லிதுவேனியா அதிபர் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்த தீர்மானம் லிதுவேனியா பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட உள்ளது. இந்த அவசர நிலை மார்ச் 10 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர நிலை காலத்தின் போது அரசாங்க நிதிகளின் பயன்பாட்டில் நெகிழ்வுத்தன்மை, எல்லை பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம், நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.