உக்ரைனிய படைகள் பாலத்தை அழித்ததால் ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலி

உக்ரைனிய படைகள் ஒரு ஆற்று பாலத்தை அழித்ததால், ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைனிய படைகள் பாலத்தை அழித்ததால் ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலி
Published on

ஆற்றுப்பாலம் அழிப்பு

உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாய் வசப்படுத்தும் முயற்சியில் ரஷிய படைகள் கடந்த பல நாட்களாக தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. இந்த நிலையில் ரஷியாவின் ஒரு படைப்பிரிவினருக்கு துயர முடிவு நேரிட்டுள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் வழியாக சிவர்ஸ்கி டொனெட்ஸ் என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு மிதக்கும் பாலம் இருந்து வந்தது. ஆற்றைக் கடந்து வருவதற்கு இந்த பாலம் ரஷிய படைகளுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது.

படைப்பிரிவினர் பலி

இதை அறிந்து நோட்டமிட்டு வந்த உக்ரைன் படையினர் அந்தப் பாலத்தை அதிரடியாக தாக்கி அழித்தபோது, ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் ஆற்றில மூழ்கி பலியாகி விட்டதாக உக்ரைன் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலத்தின் அருகே நிறுத்தப்பட்ட ராணுவ வாகனங்களையும் உக்ரைன் படையினர் தாக்கி அழித்தனர்.

இதுபற்றி இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் நேற்று கூறுகையில், ரஷியா குறைந்தபட்சம் ஒரு படைப்பிரிவை இழந்துள்ளது என தெரிவித்தது. இந்த பாலத்தை அழித்ததையொட்டிய படங்களை உக்ரைன் வான்வழிப்படைகள் வெளியிட்டுள்ளன. இதற்கிடையே உக்ரைன் அதிகாரிகள், கருங்கடலில் ரஷிய கப்பல் ஒன்றை தங்கள் படையினர் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உக்ரைனுக்கு முக்கிய வெற்றி ஆகும்.

சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்

உக்ரைனின் மத்திய பொல்டாவா பிராந்தியத்தில் கிரெமென்சுக் நகரில் இருந்த முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரஷிய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்தி அழித்தன. அந்த ஆலை மீது 12 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக பொல்டாவா பிராந்திய ராணுவ, சிவில் நிர்வாக தலைவர் டிமிட்ரோ லுனின் தெரிவித்தார். இந்த தாக்குதலால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பிடித்து எரிந்தது. ஆனாலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஆலை ரஷிய தாக்குதலுக்கு ஆளாகி தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

போர்க்குற்ற விசாரணை

இதற்கு மத்தியில் உக்ரைனில் முதல் போர்க்குற்ற வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அங்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த 62 வயது முதியவரை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற ரஷிய துருப்பு வாடிம் சிஷிமரின் (21) பிடிபட்டார். அவர் மீதுதான் கீவ் கோர்ட்டில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன் விசாரணை நேற்று நடந்தது. விசாரணையின்போது தான் ரஷிய படை வீரர் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற குற்றச்சாட்டு பற்றி அவர் அடுத்த விசாரணையின்போது பதில் அளிப்பார், வழக்கு விசாரணை 18-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று ரஷியா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com