பதுங்கு குழியில் வசிக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; காரணம் என்ன?

புதினுக்கான சமையல்காரர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என அவருடன் நெருங்கி பணியாற்றக்கூடிய நபர்கள் பொது போக்குவரத்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பதுங்கு குழியில் வசிக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; காரணம் என்ன?
Published on

மாஸ்கோ

உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். போரை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை. உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர்ந்து, போரானது 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த சூழலில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போரை முன்னிட்டு, அவர் தனிமையில் அதிக நேரம் செலவிடுகிறார். சமீபத்திய மாதங்களில் அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை ரஷியா அதிகரித்து உள்ளது.

ஐரோப்பிய உளவு பிரிவினர் மற்றும் புதினுடன் நெருங்கிய நபர்கள் அளித்த தகவலின்படி, புதின் பதுங்கு குழியில் அதிக நேரம் தங்கியிருக்கிறார். குழியில் இருந்தபடியே, போருக்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். பொதுமக்கள் விவகாரங்களில் அதிகம் தலையிடுவதில்லை என தெரிய வந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து தனிமைப்படுத்தி கொள்ளலை அவர் அதிகரித்து கொண்டார். ஆட்சி கவிழ்ப்பு அல்லது டிரோன் தாக்குதல் நடத்துவதற்கான ஆபத்து உள்ளது என கூறி கடந்த மார்ச்சில், இருந்து கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைனின் ஆபரேசன் ஸ்பைடர்வெப் என்ற அதிர்ச்சி தரும் திட்டம் அச்சுறுத்தலாக உள்ளது என புதினின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, புதின் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மாஸ்கோ நகரில் உள்ள தங்களுடைய வீடுகளில் அதிகம் தங்குவதில்லை. வடமேற்கு ரஷியாவில் உள்ள வீடுகளிலும் அவர்கள் தங்குவதில்லை. பல வாரங்களாக தெற்கு ரஷியாவில் உள்ள பதுங்கு குழிகளில் புதின் நேரம் செலவிடுகிறார் என தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டு, இயல்பு நிலை நீடிப்பது போன்று அரசு ஊடகங்கள் தோற்றம் ஏற்படுத்தி வருகின்றன என பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.

புதினுக்கான சமையல்காரர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என அவருடன் நெருங்கி பணியாற்றக்கூடிய நபர்கள் பொது போக்குவரத்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மொபைல் போன்கள் அல்லது இணையதள வசதிகளை புதினின் முன்பு பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com