

மாஸ்கோ,
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இதுவரை உலக அளவில் 18.30 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 39.63 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 55,38,142 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 672 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 50,17,321 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,84,935 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மறுபுறம் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தொற்று பாதிப்பு உயரத்தொடங்கியதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதால் புதிதாக ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.