

வாஷிங்டன்,
பிரபல தொழிலதிபரும் சிறந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருமான செர்ஜே பிரின், சர்வதேச நிதி ஊடகமான போர்ப்ஸ் வெளியிட்ட உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களைத் தொடர்ந்து, அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ் மற்றும் மைக்கேல் டெல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 3-ம் இடம் பெற்றுள்ளார்.
நாம் அனைவரும் உலக விஷயங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ள கூகுள் நிறுவனத்தை உருவாக்கியது லாரி பேஜ் மற்றும் செர்ஜே பிரின் ஆவார்கள். நம் அனைவருக்கும் பணம் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் சிலரால்தான் அதனை சாத்தியமாக்க முடியும். அந்த வரிசையில் தற்போது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தக்காரரான செர்ஜே பிரின் சர்வதேச அளவிலான கோடீஸ்வரர் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
ரஷ்யாவில் பிறந்த செர்ஜே பிரின், தனது 6 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் மிகச்சிறந்த என்ஜினீயராக விளங்கிய இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தனது கல்லூரி நண்பரான லாரி பேஜ் உடன் இணைந்து கடந்த 1998-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தை தொடங்கினர். தற்போதைய நிலவரப்படி இவருடைய சொத்து மதிப்பு தோராயமாக 243 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவிலான கோடீஸ்வரர் பட்டியலில் செர்ஜே பிரின் 3-வது இடத்தை பிடித்தார்.