முடிவுக்கு வந்த இழுபறி: பாகிஸ்தானில் மீண்டும் பிரதமராகும் ஷபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான புதிய அரசு பாகிஸ்தானில் விரைவில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவுக்கு வந்த இழுபறி: பாகிஸ்தானில் மீண்டும் பிரதமராகும் ஷபாஸ் ஷெரீப்
Published on

இஸ்லாமாபாத்,

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின.

இதில், ஊழல் வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப் இ இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 93 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களிலும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் சர்தாரி பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வென்றன. மற்ற இடங்களை சிறிய கட்சிகள் கைப்பற்றின.

ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசை நிறுவ அரசியல் கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.

ஆனால் இம்ரான்கான் கட்சி கூட்டணிக்கான அழைப்பை நிராகரித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்தன. ஆனால் அதிகாரப்பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதில் இருதரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவின. இது தொடர்பாக இரு கட்சிகளும் பல்வேறு சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தின.

ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. வருகிற 29-ந் தேதி நாடாளுமன்றம் தனது முதல் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்கிற சூழலில் இரு கட்சிகளும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தின.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரு கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கூட்டணி அரசை அமைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. இரு கட்சிகளும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷபாஸ் ஷெரீப் (வயது 72) மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி (68) அதிபர் பதவிக்கான தேர்தலில் இரு கட்சிகளின் கூட்டு வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான புதிய அரசு விரைவில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com