

கராச்சி
போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்ற பெண் ஒருவரை, பெண் போலீஸ் இன்பெக்டர் ஒருவர் மிரட்டி, அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வாண நடனம் ஆட வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குவெட்டா நகரில்ஜின்னா டவுன் போலீஸ் நிலைய சரகத்தில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக பெண் ஒருவரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் தலைமையிலான பெண் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணை என்ற பெயரில், இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் மற்றும் போலீசார் அந்த பெண்ணை மிரட்டி அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியதுடன், பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்து, அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக அவரை நடனமாடவும் வைத்திருக்கின்றனர். மேலும் இந்த மொத்த சம்பவத்தை அவர்கள் வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து போலீஸ் துணை ஐஜி முகமது அசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் பார் குல் தாரின் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து இந்த புகார் குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டார்.
சிறப்பு அதிகாரியின் விசாரணையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெண்ணை நிர்வாணமாக்கி நடனமாட வைத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், போலீஸ் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத்தை உடனடியாக பணிநீக்கம் செய்த காவல்துறை, அவரை பணியில் இருந்து நிரந்தரமாக கட்டாய ஓய்வு பெற வைத்திருக்கிறது. மேலும், விசாரணைக்கு அழைத்து வந்து லாக் அப்பில் பெண்ணை சித்ரவதை செய்த விவகாரத்தில் புஷ்ரா அப்சல், ஹூமா பைசல், உஸ்மா நஸ்ரின், பாரா கலீல் மற்றும் சமீனா மன்சூர் ஆகிய 5 பெண் போலீசார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்