இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: கவலை தெரிவித்த சிங்கப்பூர் அரசு

ராஜதந்திர வழிமுறைகள் மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும் என சிங்கப்பூர் அரசு வலியுறுத்தியுள்ளது.
சிங்கப்பூர்,
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் குறித்து சிங்கப்பூர் அரசு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் ராணுவ மோதல் மிகவும் கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் ராஜதந்திர வழிமுறைகள் மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.