கைவிலங்குடன் சிறை சென்ற ரணில்.. போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட கோர்ட்டு

அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டார்.
கைவிலங்குடன் சிறை சென்ற ரணில்.. போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட கோர்ட்டு
Published on

கொழும்பு,

இலங்கையில் கடந்த 2022 ஜூலை முதல் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76). மேலும் 6 முறை இலங்கையின் பிரதமர் பதவியையும் அலங்கரித்து உள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே அதிபராக இருந்த காலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி மைத்ரிக்கு இங்கிலாந்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அரசு பணத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து சென்று மனைவி பட்டம் பெறும் தனிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த பயணத்துக்கு அரசு நிதியை பயன்படுத்தியது தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே மீது சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி கொழும்புவில் உள்ள சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் நேற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக இந்த முறைகேடு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கேவின் பணியாளர்களிடமும் விசாரணை நடந்தது. 

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவை கைவிலங்கிட்டு சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றநிலையில், வரும் 26ம் தேதி வரை, அவரை போலீஸ் காவலில் அடைக்க அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. 

அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டிருப்பது அவரது ஐக்கிய தேசிய கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com