அமைதி பேரணியில் தற்கொலை தாக்குதல்; 14 பேர் படுகொலை: பாகிஸ்தானில் சோகம்

இந்த சம்பவத்திற்கு மாகாண முதல்-மந்திரி முகமது அப்ரிடி, கவர்னர் பைசல் கரீம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அமைதி பேரணியில் தற்கொலை தாக்குதல்; 14 பேர் படுகொலை:  பாகிஸ்தானில் சோகம்
Published on

பெஷாவர்

பாகிஸ்தானில் அமைதி பேரணியில் நடந்த தற்கொலை தாக்குதலில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் காபல் நகரில், நேற்று அமைதி பேரணி ஒன்று நடந்தது. இந்த பகுதியில் அமைதி வேண்டும் என வலியுறுத்தியும், சில மாதங்களாக போலீசார் பாதுகாப்பு விசயத்தில் செயல்பாடற்ற நிலையில் உள்ளனர் என குற்றம் சாட்டியும் இந்த பேரணி நடந்தது.

14 பேர் பலி

ஸ்வாட் அமன் ஜிர்கா என்ற உள்ளூர் பழங்குடியின கவுன்சில் சார்பில் கோஷங்களை எழுப்பியும், வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் அவர்கள் சென்றனர்.

அப்போது, பேரணியில் திடீரென தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குழந்தை ஒன்று, பொதுமக்களில் 3 பேர், அதிகாரி ஒருவர் மற்றும் 5 போலீசார் உள்பட 14 பேர் பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்திற்கு மாகாண முதல்-மந்திரி முகமது அப்ரிடி, கவர்னர் பைசல் கரீம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com