சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்பனை; மனமுடைந்து அழுத தந்தை

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது, அவரது தந்தை மனமுடைந்து அழுது உள்ளார்.
சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்பனை; மனமுடைந்து அழுத தந்தை
Published on

நியூயார்க்,

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. தமிழகத்தின் மதுரை நகரில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் பொறியியல் பட்டம் பெற்றவர். இவரது பூர்வீக வீடு ஒன்று சென்னை அசோக் நகரில் இருந்தது.

இந்த வீட்டை திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மணிகண்டன் வாங்கி உள்ளார். இதற்காக 4 மாதங்கள் வரை அவர் காத்திருந்து உள்ளார். வீட்டை சுந்தர் பிச்சையின் தந்தை ஆர்.எஸ். பிச்சை, மணிகண்டனிடம் ஒப்படைக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு உள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் மணிகண்டன், தனது கட்டுமான நிறுவனத்தின் பெயரால் இதுவரை 300 இல்லங்களை கட்டி தந்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, இந்த வீட்டை வாங்கும்போது, சுந்தர் பிச்சையின் தந்தை ஆர்.எஸ். பிச்சை அமெரிக்காவில் வசித்து வந்தார். இதனால், 4 மாதங்கள் காத்திருந்தேன்.

எங்களது முதல் சந்திப்பில், சுந்தரின் தாயார் எனக்கு பில்டர் காபி போட்டு கொடுக்க, அவரது தந்தை சொத்து ஆவணங்களை என்னிடம் வழங்கினார். அவர்களது பணிவு மற்றும் அடக்கம் ஆகிய அணுகுமுறையால் வியந்து போனேன்.

சொத்து பதிவு நடைமுறையின்போது கூட கூகுள் சி.இ.ஓ. பெயரை பயன்படுத்த கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்தவர் சுந்தரின் தந்தை என கூறியுள்ளார். 1989-ம் ஆண்டு காரக்பூர் ஐ.ஐ.டி.யில் படிக்க செல்வதற்கு முன் தனது 20 வயது வரை சுந்தர் பிச்சை இந்த வீட்டிலேயே வசித்துள்ளார்.

இந்த சொத்து ஆவணங்களை சுந்தரின் தந்தை மணிகண்டனிடம் வழங்கியபோது, சில நிமிடங்கள் வரை உணர்ச்சி பெருக்குடனேயே காணப்பட்டார். ஏனெனில், இது அவரது முதல் சொத்து ஆகும். இந்த வீடு இருந்த பகுதியை காலி மனையாக்கி விட்டு, வில்லா ஒன்றை கட்டியெழுப்ப மணிகண்டன் திட்டமிட்டு உள்ளார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அந்த பணி நிறைவடையும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com