

பீஜிங்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 2-வது முறையாக பதவியேற்றது முதல் சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்புகளை அமல்படுத்தி வருகிறார். இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டது.
இதன்படி வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாக கூடிய பொருட்களுக்கான வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டது. இது அந்த நாடுகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் தொடர்புடைய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கத்துடன் நடந்து கொள்ளும் நாடுகளுக்கான வரியை டிரம்பு அரசு குறைத்தது.
இந்த சூழலில், டிரம்ப்பின் வரிவிதிப்புகளுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் சில வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அதில், டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் தெரிவித்தனர்.
எனினும், இறக்குமதிகளை ஒழுங்குபடுத்த ஜனாதிபதிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அளித்து உள்ள அதிகாரத்தின்படி, வர்த்தக சட்டம் 1974, பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத வரி விதிப்புக்கான உத்தரவை டிரம்ப் அமல்படுத்தினார்.
150 நாட்களுக்கு செல்லத்தக்க இந்த தற்காலிக 10 சதவீத இறக்குமதி வரியானது 24-ந்தேதி அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், இந்த வரியை நேற்று முன்தினம் இரவு 15 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தி, டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக ஆக்கும் நடைமுறை வெற்றி பெறும். இதற்கு முன்பு இல்லாத வகையில் சிறந்த நாடாக அமெரிக்கா இருக்கும் என்றும் தன்னுடைய வரி விதிப்புகளை டிரம்ப் நியாயப்படுத்தி பேசினார்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே வந்து விட்ட சூழலில், ஒருதரப்பு வரிகளை கைவிடுங்கள் என அமெரிக்கா அரசை சீனா வலியுறுத்தியுள்ளது.
இதுபற்றி சீனாவின் வர்த்தக அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறும்போது, அனைத்து வடிவிலான ஒருதரப்பு வரி அதிகரிப்பை தொடர்ந்து சீனா எதிர்த்தே வந்திருக்கிறது. வர்த்தக போரில் ஒருபோதும் வெற்றி பெற்றவர்களே இல்லை. பாதுகாப்புவாதத்திற்கு எப்போதும் இடமே இல்லை.
அமெரிக்காவின் ஒருதரப்பு வரி விதிப்பு நடவடிக்கைகள், சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார விதிகளை மீறுவது மட்டுமின்றி, அமெரிக்காவின் உள்நாட்டு சட்டங்களை மீறுவதும் ஆகும். அது, யாருக்கும் பயன் தராத ஒன்றாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.