ஐதராபாத் சாலைக்கு தனது பெயர் சூட்டப்பட்டதற்கு நன்றி தெரிவித்த டிரம்ப்

ஐதராபாத் சாலைக்கு தனது பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
ஐதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயர்
Published on

வாஷிங்டன்,

தெலுங்கான மாநில தலைநகர் ஐதராபாத்தில், அமெரிக்க தூதரகம் அருகே அமைந்துள்ள சாலையின் பெயர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பெயரில், 'டொனால்டு டிரம்ப் அவென்யூ' என மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

டிரம்ப் பெயர்

தெலுங்கானாவில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கிறது. தலைநகர் ஐதராபாதில் அமெரிக்க தூதரகம் அருகே அமைந்துள்ள சாலையின் பெயரை, 'டொனால்டு டிரம்ப் அவென்யூ' என்று பெயர் மாற்றம் செய்ய ரேவந்த் ரெட்டி முடிவு செய்தார். இதற்கான முயற்சி கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்டது. அப்போது இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது போன்ற பிரச்னைகளால் இரு தரப்பு உறவு மோசமடைந்தது.

இதனால் ஐதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயர் சூட்டும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பதற்றம் குறைந்து இரு தரப்பு உறவுகள் சீரடைந்துள்ள நிலையில், இந்த திட்டம் மீண்டும் உயிர் பெற்றது.

இந்தியா - ஐதராபாத்

ஐதராபாத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவின் அடையாளப்பூர்வமான அங்கீகாரமாகவே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நடவடிக்கை நகரின் உலகளாவிய மதிப்பை வலுப்படுத்தவும், இந்தியா-அமெரிக்கா உறவில் அதன் பங்கை முன்னிலைப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஐதராபாத் சாலைக்கு தனது பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அந்த விழாவின் புகைப்படத்தை தனது ட்ரூத் சோஷியல் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, அவர் கூறியதாவது:-

"இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள புதிய டொனால்ட் டிரம்ப் அவென்யூ. இதுபோன்று கௌரவிக்கப்படும் முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப். நன்றி".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com