ஸ்பெயினில் பாரம்பரிய தக்காளி சண்டை திருவிழா கோலாகலம்

திருவிழாவில், தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.
ஸ்பெயினில் பாரம்பரிய தக்காளி சண்டை திருவிழா கோலாகலம்
Published on

புனோல்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்டு இறுதி வாரத்தில் தக்காளி திருவிழா நடத்தப்படும் வழக்கம். பல ஆண்டுகளாக இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டு ஸ்பெயினின் கிழக்கே. வாலன்சியா நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் புனோல் நகரில் இந்த பாரம்பரிய திருவிழா இன்று நடந்தது.

இதில், வெள்ளை நிற உடையில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த திருவிழாவுக்காக நன்றாக விளைந்த, சிவப்பு நிறத்திலான டன் கணக்கிலான தக்காளிகள் லாரிகளில் கொண்டு வந்து தயாராக வைக்கப்பட்டு இருந்தன.

லா டொமேடினா என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பாரம்பரிய திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கென்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் திருவிழாவில் பங்கேற்க திரண்டு வந்திருந்தனர். உள்ளூர் மக்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. பட்டாசு வெடிப்புகளுடன் திருவிழா களைகட்ட தொடங்கியது. இந்த திருவிழாவில், தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.

பல மணிநேரம் இப்படி நட்பு ரீதியிலான இந்த சண்டை நீடித்தது. இந்த திருவிழாவுக்கு வந்திருந்த சுற்றுலாவாசிகள் மொபைல் போனில் செல்பி எடுத்தபடியும், தக்காளிகளை மற்றவர்கள் மீது வீசியும், தங்கள் மீது தக்காளிகளை பிழிந்து பூசியபடியும் காணப்பட்டனர். இந்த தக்காளிகள் அதிக அமிலத்தன்மையுடன் புளிப்பு சுவை நிறைந்தவை. மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல. இதற்காகவே, இந்த தக்காளிகள் தனிப்பட்ட முறையில் விளைவிக்கப்படுகின்றன என கூறப்படுகிறது. இதன்பின்பு, தெருக்களில் உள்ள தக்காளி கழிவுகளை, அதற்காக பணியமர்த்தப்பட்ட குழுவினர் நீரை பீய்ச்சியடித்து. சுத்தம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com