

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் 5 சிறுவர்களின் உயிரைக் குடித்த கார் பந்தயம் காரணமாக இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில், ஹார்பன்ஸ்புரா பகுதியில் உள்ள கால்வாய் சாலையில் நேற்று அதிகாலை 2 கார்கள் அதிவேக பந்தயத்தில் ஈடுபட்டன. அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரம் மீது பயங்கரமாக மோதி நொறுங்கியது.
இதில் காரில் இருந்த 3 சிறுவர்கள் மற்றும் சாலையில் நடந்து சென்ற 2 சிறுவர்கள் என மொத்தம் 5 சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். வார இறுதி நாட்களில் இளைஞர்கள் நடத்தும் இந்த ஆபத்தான கார் பந்தயங்கள் குறித்து லாகூர் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.