

டொரண்டோ
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா உள்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அவர் முதலில் இந்தியாவுக்கு நாளை மறுநாள் வருகை தருகிறார். மும்பை நகருக்கு வரும் அவர், இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.
அப்போது தொழிலதிபர்களையும் சந்திக்கிறார். இதேபோன்று ஆஸ்திரேலியா நாட்டுக்கும் அவர் பயணம் மேற்கொள்கிறார். அப்போது கான்பெர்ரா நகரில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுவார். 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு கனடா பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீசையும் அவர் சந்தித்து பேசுகிறார். இதன்பின்னர் ஜப்பானின் டோக்கியோ நகருக்கு செல்லும் அவர், ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி சனேவை சந்திக்க உள்ளார்.
இந்த 3 நாடுகளுக்கான கனடா பிரதமரின் பயணத்தின்போது, 3 நாடுகளின் பிரதமர்களையும் நேரில் சந்தித்து வர்த்தகம் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், கார்னி வெளியிட்ட செய்தியில், நிச்சயமில்லாத சூழல் பெருகி காணப்படும் உலகில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அதற்கேற்ப எங்கள் வர்த்தகத்தை பன்முகப்படுத்தி, பெரிய அளவில் புதிய முதலீடுகளை நாங்கள் ஈர்க்கிறோம் என தெரிவித்து உள்ளார்.
அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுக்கான ஏற்றுமதியை இரட்டிப்பாக்க கார்னி இலக்கு நிர்ணயித்து உள்ளார். ஏனெனில் அமெரிக்காவின் வரி விதிப்புகள் முதலீட்டில் மந்தநிலையை ஏற்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.
வரி விதிப்புகளால் கனடாவின் பொருளாதாரம் மற்றும் இறையாண்மையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அச்சுறுத்தி வருவதுடன், அதனை 51-வது மாகாணம் என்றும் கூறி வருகிறார். சீனாவுடன் சமீபத்தில் கனடா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத வரிகளை விதிக்க போகிறேன் என்றும் டிரம்ப் மிரட்டினார்.
இதுபோன்ற விசயங்கள், அமெரிக்காவின் நீண்ட கால கூட்டாளியாக உள்ள கனடாவின் பிரதமர் கார்னிக்கு கோபம் ஏற்படுத்தி உள்ளன. அதனை அவர் அவ்வப்போது வெளிப்படுத்தியும் வருகிறார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க ஏற்றுமதியை பெருமளவில் குறைக்க கனடா பிரதமர் கார்னி ரகசிய திட்டம் வைத்திருப்பது தெரிகிறது.
இந்நிலையில், அவருடைய 3 நாடுகளின் சுற்றுப்பயணம் அமைய உள்ளது. அந்நாடுகளுடனான வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும் என கூறப்படுகிறது.