

வாஷிங்டன்,
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.
உக்ரைன் போரை தொடரும் ரஷியாவை வழிக்கு கொண்டு வரும் நோக்கில் அதன் பொருளாதாரம் மற்றும் ராணுவ வலிமையை முடக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
எனவே அந்த நாட்டின் தலைமை மற்றும் எரிபொருள் துறை மீது பொருளாதார தடை விதிக்கவும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கவும் வகை செய்யும் மசோதா ஒன்றை அமெரிக்கா உருவாக்கியது.
அமெரிக்க செனட் சபையில் கடந்த மாதம் நிறைவேறிய இந்த மசோதா, பிரதிநிதிகள் சபையிலும் கடந்த 16-ந்தேதி நிறைவேறியது.
கடந்த ஜூலை மாதம் மரணமடைந்த குடியரசுக்கட்சி எம்.பி. லிண்ட்சே கிரகாமின் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு டிரம்ப் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து உள்ளார். இந்த சட்டம் 30 நாட்களுக்குள் அமலுக்கு வருகிறது.
ரஷியா மற்றும் ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்கும் லிண்ட்சே சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து போட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள், வரி விதிப்புகள் மற்றும் தடை கள் விதிக்கவும், ஈரானுக்கு எதிராக ஏற்கனவே இருக்கும் தடைகளை விரிவுப டுத்தவும் இந்த சட்டம் டிரம்புக்கு அதிகாரம் அளிப்பதாகவும் கூறியிருந்தது.
மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.
இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தைய 12 மாத காலத்தில் ரஷியாவில் இருந்து அதிக எண்ணெய் மற்றும் கியாஸ் இறக்குமதி செய்த முதல் 5 நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படும்.
அமெரிக்காவின் புதிய சட்டத்தில் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டின் பெயரும் குறிப்பிடவில்லை. ஆனால் ரஷியாவிடம் அதிக எண்ணெய் வாங்கும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. எனவே இந்த சட்டம் இந்தியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என தெரிகிறது.