வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

இந்த சந்திப்பின்போது மத்திய கிழக்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.
வாஷிங்டன்,
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காசா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
இந்த போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை.
இதனால் மத்திய கிழக்காசிய நாடுகளில் அமைதியை கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியது. இந்தநிலையில் வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து விருந்து அளித்துள்ளார். அதன்படி பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி ஆகியோரை தனித்தனியாக டிரம்ப் சந்தித்து விருந்து அளித்தார்.
ஏற்கனவே தனது 2-வது பதவிக்காலத்தின்போது சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். இதன்மூலம் காசா போரில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.
தற்போதைய இந்த சந்திப்பின்போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, அமெரிக்க ஜெட் விமானங்கள், கணினி சேவையகங்கள், அலுமினிய உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. அதேபோல் அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின்னுடன் ஆலோசிக்கப்பட்டது.






