ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்? புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து

டிரம்ப் கையெழுத்திட்டுள்ள இந்த சட்டத்தால் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளன.
ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்? புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து
Published on

வாஷிங்டன்: ரஷியா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த சட்டம் மூலம் ரஷியாவுக்கு எதிரான தடைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

100 சதவீதம் வரை வரி

‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்ற இந்த சட்டத்தின் கீழ், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் இடம்பெற்றுள்ளதால், இந்த சட்டம் இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனினும், இந்திய பொருட்களுக்கு உடனடியாக 100 சதவீத வரி விதிக்கப்பட்டதாக அர்த்தமில்லை. அதற்கான அதிகாரம் டிரம்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் எரிசக்தி துறைக்கு குறி

ரஷிய அதிகாரிகள், வங்கிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிரான தடைகளை விரிவுபடுத்துவதுடன், ரஷியாவின் எரிசக்தி வர்த்தகம் மற்றும் தடைகளைத் தவிர்க்க உதவும் கப்பல் அமைப்புகளுக்கும் இந்த சட்டம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். மேலும், ஈரான் மீது ஏற்கனவே உள்ள தடைகளையும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் சட்டத்தில் விதிகள் இடம்பெற்றுள்ளன. ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிப்பதன் மூலம், அந்த நாடுகள் ரஷிய எரிசக்தியை வாங்குவதை குறைக்கச் செய்வதும், உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும் இத்தகைய சட்டங்களை நிறைவேற்றி வருவதாக டிரம்ப் நிர்வாகம் கூறி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com