

ஹனோய்,
வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச ஆடை பேஷன் விழாவில், தாய்மையையும் பிரசவத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் வலியையும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடை, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று "சிறந்த உலக ஆடை வடிவமைப்பாளர்" விருதை வென்றுள்ளது.
73-வது உலக அழகிப் போட்டி வியட்நாமில் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் பல அழகிகள் கலந்து கொண்டனர். இதன் இறுதி பகுதி, வியட்நாமின் நா டிராங் நகரில் உள்ள புகழ்பெற்ற 'தோ தியேட்டர்' அரங்கில் இன்று (சனிக்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், உகாண்டா நாட்டு அழகி முஹோசா டிரிவியா எல் மேடையில் அணிந்து வந்த "தி லேயர்ஸ் ஆப் லைப்" என்ற கவுன் வகை ஆடை அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் கீஷா அப்தல்லா இந்த உடையை வடிவமைத்திருந்தார். ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளும் சிசேரியன் (சி-செக்ஷன்) பிரசவ அறுவை சிகிச்சையின் போது, பெண்ணின் உடலின் வெளிப்புறத் தோல் பகுதி முதல் உள்ளே இருக்கும் கருப்பை வரை மருத்துவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு உடற்கூறியல் அடுக்கையும் குறிக்கும் விதமாக இந்த உடையின் அடுக்குகள் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
மருத்துவமனையில் நடக்கும் ஒரு கடினமான அறுவை சிகிச்சை மற்றும் பிரசவ வலியை, ஒரு உன்னதமான கலை வடிவமாக மாற்றி, தாய்மார்கள் ஒரு புதிய உயிரை உலகிற்கு கொண்டு வர செய்யும் தியாகத்தை இந்த ஆடை உலகிற்கு பறைசாற்றியது. இந்த புதுமையான சிந்தனையைப் பாராட்டி, நடுவர் குழு இதற்கு "சிறந்த உலக ஆடை வடிவமைப்பாளர்" விருதை வழங்கியது.
உலக நாடுகள் பலவற்றின் கலாச்சார ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்த விழாவில், தாய்மையை மையப்படுத்திய உகாண்டா வடிவமைப்பாளரின் இந்த படைப்பு ஒட்டுமொத்த சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.