

வியன்னா,
ஈரானின் அணுஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக அந்த நாட்டுக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுக்கும் இடையில் 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்ததில் குறைபாடுகள் இருப்பதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா அதில் இருந்து வெளியேறியது. மேலும் ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதித்தது. இதை தொடர்ந்து ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக புறக்கணித்தது. இதனால் அணுசக்தி ஒப்பந்தம் நீர்த்துபோகும் அபாயம் உருவானது.
இதை தொடர்ந்து, அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பது தொடர்பாக ஈரானுக்கும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கும் இடையில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் மறைமுக பங்கேற்பாளராக பங்கேற்று வந்தது.
இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் உறுதி செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்றால் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என ரஷியா கோரிக்கை வைத்துள்ளது. இந்த பிரச்சினை காரணமாக அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.