

கீவ்
ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன்கள் தாக்குதல்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா-உக்ரைன் தாக்குதல் 5-வது ஆண்டாக தொடர்ந்து வருகிறது. இதில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் பெரிய பலன் ஏற்படவில்லை. தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது.
இந்த சூழலில், ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன்கள் தாக்குதல்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. ரஷியாவின் முக்கிய ஆயுத உள்கட்டமைப்புகள் மீது டிரோன்களை கொண்டு உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 50 கி.மீ. தொலைவில் எலெக்டிராஸ்டல் நகரிலும், உக்ரைன் எல்லையில் இருந்து 360 கி.மீ. தொலைவில் உள்ள தம்போவ் பகுதியிலுள்ள கொடோவ்ஸ்க் நகரிலும் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
நீண்டதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் டிரோன்கள் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டன. எண்ணெய் நிறுவனம் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.
இதுபற்றி ஜெலன்ஸ்கி கூறும்போது, உக்ரைன் நடத்திய சிறப்பு அதிரடி நடவடிக்கைகளின்படி, அஜோவ் கடல் பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீதும் இந்த தாக்குதல்கள் நடந்தன என குறிப்பிட்டார். இதில், கொடோவ்ஸ்க் நகரில் உள்ள ஆயுத கிடங்கில் இரவு பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் பலியானார்கள். 25 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதனை தம்போவ் பகுதிக்கான கவர்னர் ஈவ்ஜெனி பெர்விஷோவ் கூறியுள்ளார். எலெக்டிராஸ்டல் நகரில் 24 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனை மாஸ்கோ நகர கவர்னர் ஆண்ட்ரி ஒரோபியோவ் கூறியுள்ளார். இவை தவிர, மாஸ்கோவிலுள்ள நோகின்ஸ்க் என்ற இடத்தில் எண்ணெய் நிறுவனம் மீது நடந்த டிரோன்கள் தாக்குதல்களில் 2 பேர் காயமடைந்தனர் என்றும் ஒரோபியோவ் கூறியுள்ளார்.