

ஜெனீவா,
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 47 உறுப்பினர்கள் கொண்ட மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினராக சேர, ஐ.நா. பொதுச்சபையின் 193 நாடுகளால் மூன்றாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷியாவும் உறுப்பினராக உள்ளது.
இந்த நிலையில், உலகின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து, ரஷியாவை நீக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
உக்ரைன் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ரஷிய வீரர்கள் பின்வாங்கும் போது அங்குள்ள பொதுமக்களை கண்மூடித்தனமாக கொன்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புச்சா பகுதியில் நடைபெற்ற படுகொலை சம்பவங்களை தொடர்ந்து,47 உறுப்பினர்கள் கொண்ட மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்தார்.
அவர் கூறுகையில், ரஷியப் படைகளை சேர்ந்தவர்கள் உக்ரைனில் போர்க் குற்றங்களைச் செய்ததாக நாங்கள் நம்புகிறோம். ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். மனித உரிமைகள் பேரவையில் ரஷியாவின் பங்கேற்பு ஒரு கேலிக்கூத்து" என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.
இதனையடுத்து, ஐ நா மனித உரிமைகள் பொதுச் சபையின் செய்தித் தொடர்பாளர் பாலினா குபியாக், மனித உரிமைகள் பேரவையில், ரஷியாவின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்வதற்கான தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என்றார்.
மனித உரிமைகளை திட்டமிட்டு மீறும் நாடுகளின் உரிமையை, ஐ நா பொதுச்சபையால் அந்த நாட்டின் உறுப்பினர் அந்தஸ்தை, மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து சஸ்பெண்ட் செய்யலாம் என்ற விதி உள்ளது.
ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஒப்புதல் பெற, வாக்களிக்கும் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் பெரும்பான்மை தேவைப்படும்.
முன்னதாக ரஷியாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் ஒப்புதல் பெற , ஐ நா சபையின் 193 நாடுகளில் 140 உறுப்பினர் நாடுகள் ரஷியாவிற்கு எதிராக வாக்களித்தன. இம்முறையும் அதே நிலைப்பாட்டை மீண்டும் அந்த நாடுகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையே அமெரிக்காவும் விரும்புகிறது. உறுப்பினர் நாடுகளை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.