இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவில் இடம்பெற்ற ஐ.நா. ஊழியர்கள்


இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவில் இடம்பெற்ற ஐ.நா. ஊழியர்கள்
x
தினத்தந்தி 6 Aug 2024 4:50 AM IST (Updated: 6 Aug 2024 1:09 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவில் இடம்பெற்ற ஐ.நா. ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெருசலேம்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.

ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி நடத்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவில் ஐ.நா. ஊழியர்களும் இடம்பெற்றதாக தகவல் வெளியானது. காசா முனையில் செயல்பட்டு வரும் ஐ.நா.வுக்கான பாலஸ்தீன அகதிகள் அமைப்பில் உள்ள ஊழியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவில் இடம்பெற்றுள்ளதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் பங்கேற்றனரா? என்பது குறித்து ஐ.நா. விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 9 ஊழியர்கள் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலில் இடம்பெற்ற பாலஸ்தீன ஊழியர்கள் 9 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

1 More update

Next Story