

நியூயார்க்,
உக்ரைன் விவகாரத்தில் ரஷியா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஆதரிக்குமாறு ஐ.நா உறுப்பினர்களுக்கு ரஷியா வேண்டுகோள் விடுத்துள்ளது.அந்த தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இன்று இந்த விவாத கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் , ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மீண்டும் அவசரமாக கூடுகிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே, அல்பேனியா ஆகிய 6 மேற்கத்திய மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐ.நா கூட்டம் இன்று நடைபெறுகிறது.அதில் உக்ரைன் விவகாரத்தில் வெளிப்படையான விவாதம் நடைபெற உள்ளது.
இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரிட்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரஷிய போர் குற்றங்களை நடத்தி வருகிறது. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. ரஷியாவின் இந்த சட்டவிரோத போர் அனைவருக்கும் ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டது.
ரஷியாவின் தீர்மானத்தில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக பல நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில், உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக வெளியாகி வருபவை போலியான செய்திகள் என்று ரஷிய தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று நடைபெறும் கூட்டத்தில் ரஷியாவின் தீர்மானம் மீது முழுமையான விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.