

நியூயார்க்,
சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்தார்.
அதன்படி, சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு வான்படைகள் தாக்குதல் நடத்தின. அமெரிக்காவின் குண்டு மழையால் டமாஸ்கஸ் நகரம் குலுங்கியது. சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி போரில் ஈடுபடும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து, (இந்திய நேரப்படி) இன்றிரவு 8.30 மணியளவில் அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றவுள்ளதாக ஐ.நா. தலைமயகம் தெரிவித்துள்ளது.