அகதிகள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தை விடுவிக்க ஆஸ்திரேலியாவுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

அகதிகள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தை விடுவிக்குமாறு ஆஸ்திரேலியாவை ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
அகதிகள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தை விடுவிக்க ஆஸ்திரேலியாவுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
Published on

மெல்போர்ன்,

இலங்கையை சேர்ந்த தம்பதி நடேசலிங்கம்-பிரியா. இவர்களில் பிரியா 2012-ம் ஆண்டிலும், நடேசலிங்கம் 2013-ம் ஆண்டிலும் புகலிடம் தேடி படகு மூலம் ஆஸ்திரேலியா சென்றனர்.

ஆனால் ஆஸ்திரேலிய அரசு அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நடேசலிங்கம்-பிரியா தம்பதிக்கு கோபிகா, தருணிகா என இரு மகள்கள் பிறந்தனர். தற்போது கோபிகாவுக்கு 4 வயதும், தருணிகாவுக்கு 2 வயதும் ஆகின்றன.

இந்த நிலையில், நடேசலிங்கம் குடும்பத்தினரை இலங்கைக்கு நாடு கடத்த ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் இவர்கள் நாடுகடத்தப்பட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டது. பாதி வழியில் விமானம் சென்றுகொண்டிருந்த போது ஆஸ்திரேலிய நீதிபதி, இவர்களது நாடு கடத்தும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இதனால் பாதி வழியில் விமானம் மீண்டும் திருப்பப்பட்டு ஆஸ்திரேலியா கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு அவர்கள் 4 பேரும் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடேசலிங்கம் குடும்பத்தினருக்காக ஆஸ்திரேலியாவில் சட்ட போராட்டம் நடத்தி வரும் பெண் வக்கீல் கரினா போர்டு என்பவர், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதனை ஆராய்ந்த ஐ.நா. மனித உரிமைகள் குழு, 30 நாட்களுக்குள் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தைத் தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசுக்கு கடிதம் அனுப்பி வலியுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com