

ஜெனிவா,
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதேபோல், இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கமே பொறுப்பு எனவும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் சுட்டிக்காட்டியிருப்பது இந்தியாவின் ராஜ்ய ரீதியிலான முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல்வாமாவில் நடைபெற்ற கோழைத்தனமான, கொடூரமான தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கின்றனர். ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக சீனா உட்பட 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் பெயரை ஐநா மனித உரிமை கவுன்சில் குறிப்பிடுவதற்கு, சீனா முடிந்தவரை முட்டுக்கட்டை போட முயற்சித்தும் அது, தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.