

சிங்கப்பூர்
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சிங்கப்பூருக்கு இன்று முதல் 24-ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் அந்நாட்டுக்கு இன்று அதிகாலை சென்று சேர்ந்துள்ளார்.
அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில் முக்கிய தலைவர்களான, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், வெளிவிவகார துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன், ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோரை யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
இதில் பொருளாதார ஒத்துழைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு, நீடித்த வளர்ச்சி, இணைப்பு மற்றும் நவீன உற்பத்தி உள்ளிட்ட விசயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இரு நாடுகளுக்கான விரிவான மூலோபாய நட்புறவுக்கான செயல் திட்டம் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
அவருடைய இந்த பயணத்தின்போது, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதுடன், கலந்துரையாடவும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்திற்கு வர கூடிய முதலீட்டு வாய்ப்புகளை பற்றியும் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.