

வாஷிங்டன்,
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.
சிறிய நகரங்களை ரஷியா பிடித்திருந்தாலும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன. அந்நகரங்களில் தாக்குதல் கடுமையாக இருந்து வருகிறது. ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியா போர்க்குற்றம் புரிந்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக சர்வதேசே நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ரஷியாவின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கக் கோரி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் சி.என்.என். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான மிகவும் நம்பகமான தகவல்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா அதன் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளுடன் சேர்ந்து ரஷிய எண்ணெய் இறக்குமதியை தடைசெய்வது மற்றும் ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பது போன்ற சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, ஆயுத உதவிகளையும், நிதி உதவியும் செய்து வருகிறது. அத்துடன் அமெரிக்க நட்பு நாடுகளும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.