அமெரிக்க திறன் துறையில் இருந்து விலகிய விவேக் ராமசாமி: என்ன காரணம்...? வெளியான தகவல்

ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய அமெரிக்க திறன்மேம்பாட்டு துறை பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார்.
அமெரிக்க திறன் துறையில் இருந்து விலகிய விவேக் ராமசாமி: என்ன காரணம்...? வெளியான தகவல்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, செயல் திறன் துறை ( DOGE) உருவாக்கப்பட்டது. இதனை தொழிலதிபரும் குடியரசு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான விவேக் ராமசாமியும், தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இணைந்து கவனிப்பார்கள் என்று டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் (ஜன.20) பதவியேற்ற நிலையில், DOGE பொறுப்பில் இருந்து விலகுவதாக 39 வயதாகும் விவேக் ராமசாமி அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "DOGE உருவாக்கத்தில் உதவுவதற்கு கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைத்த கவுரவம். அரசாங்கத்தை நெறிப்படுத்துவதில் எலான் மற்றும் அவரது குழுவினர் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன், ஓஹியோ மாகாணத்துக்கான எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிக விரைவாக நான் தெரிவிக்க வேண்டியிருக்கும். முக்கியமாக, ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்" என்று விவேக் ராமசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஓஹியோ மாகாணத்தின் கவர்னர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதால், விவேக் ராமசாமி அரசு செயல் திறன் துறையை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே விவேக் ராமசாமி வெளியேற எலான் மஸ்க்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

விவேக் ராமசாமியின் இந்த முடிவு குறித்து திறன் மேம்பாட்டு ஆணைய செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி கூறுகையில், திறன் மேம்பாட்டு துறையை உருவாக்குவதில் விவேக் ராமசாமி எங்களுக்கு முக்கிய பங்கு வகித்தார் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com