மோடியின் வருகை மேற்கு நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது: ரஷிய அதிபர் மாளிகை

பிரதமர் மோடி இன்று ரஷியா செல்கிறார். அங்கு அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.
மோடியின் வருகை மேற்கு நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது: ரஷிய அதிபர் மாளிகை
Published on

புதுடெல்லி,

இந்தியா-ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இரு நாட்டு உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதை ஏற்று பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) ரஷியா செல்கிறார். இன்றும், நாளையும் அங்கே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் மோடி, அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையும் நடத்துகிறார்.

இதில் பிராந்திய, சர்வதேச நலன் சார்ந்த பிரச்சினைகள் முக்கிய இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும். பாதுகாப்பு, கல்வி, முதலீடு, கலாசாரம், மக்களிடையிலான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்கள் பற்றியும் அவர்கள் விவாதிப்பார்கள் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு கடைசியாக ரஷியா சென்றிருந்தார். அதன்பிறகு தற்போதுதான் மீண்டும் அவர் ரஷியா செல்கிறார். ரஷியா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மோடியின் வருகை மேற்கு நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "மாஸ்கோவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் விரிவானதாக இருக்கும், இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை, முறைசாரா வழியில் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

பிரதமர் மோடியின் ரஷிய பயணத்தை மேற்கு நாடுகள் உன்னிப்பாகவும், பொறாமையுடனும் கவனித்து வருகிறது. ரஷிய-இந்திய உறவுகளுக்கு பிரதமர் மோடியின் வருகை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும்" என்று அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com