டிரம்பை நேசிக்கிறோம்; பாலஸ்தீனிய மக்கள் கோஷம் - காரணம் என்ன?

காசாவில் ஒப்பந்தம் ஏற்படுத்துவோம். பணய கைதிகளை மீட்டு கொண்டு வருவோம் என டிரம்ப் பதிவு தெரிவிக்கின்றது.
டிரம்பை நேசிக்கிறோம்; பாலஸ்தீனிய மக்கள் கோஷம் - காரணம் என்ன?
Published on

வாஷிங்டன் டி.சி.,

காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

எனினும், நாங்கள் பயங்கரவாதிகளையே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளால், பல சந்தர்ப்பங்கள் திறந்துள்ளன என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று கூறினார். இதனால், மீதமுள்ள பணய கைதிகளை சொந்த நாட்டுக்கு அழைத்து வரும் சாத்தியம் அதிகரித்து உள்ளது என்றும் கூறினார்.

எனினும், போரை இஸ்ரேல் நிறுத்தும்படி பணய கைதிகளின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஒரு விரிவான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி, 50 பணய கைதிகளையும் திரும்ப அழைத்து, காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வேர வேண்டும் என அவர்கள் நேற்று வலியுறுத்தினர்.

இந்த சூழலில், அமெரிக்க ஆதரவு பெற்ற நிவாரண உதவி பொருட்கள் காசாவுக்குள் கொண்டு செல்லப்பட்டன. இதுபற்றிய வீடியோ ஒன்றை வெள்ளை மாளிகையின் ஊடக செய்தி தொடர்பாளரான கரோலின் லீவிட் பகிர்ந்து உள்ளார். அதில் பாலஸ்தீனிய மக்கள் டிரம்பை நாங்கள் நேசிக்கிறோம். டொனால்டை நேசிக்கிறோம் என கோஷங்களை எழுப்பினர்.

இதேபோன்று டிரம்ப் வெளியிட்ட பதிவு ஒன்றையும் லீவிட் பகிர்ந்து உள்ளார். அதில், காசாவில் ஒப்பந்தம் ஏற்படுத்துவோம். பணய கைதிகளை மீட்டு கொண்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கியுள்ள பணய கைதிகள் மீட்கப்படும் சாத்தியம் அதிகரித்து காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com