பயங்கரவாத அமைப்புகள் தலைதூக்க விட மாட்டோம் ; இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பரபரப்பு பேச்சு

இலங்கை சுதந்திர தின விழாவில் பங்கேற்று பேசிய அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பயங்கரவாத அமைப்புகளை தலைதூக்க விட மாட்டோம் என கூறினார்.
பயங்கரவாத அமைப்புகள் தலைதூக்க விட மாட்டோம் ; இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பரபரப்பு பேச்சு
Published on

கொழும்பு,

இலங்கையில் 72-வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகரமான கொழும்புவில் நடந்த விழாவில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

பயங்கரவாதத்துக்கு வழிநடத்தும் பயங்கரவாத அமைப்புகளை இலங்கையில் தலைதூக்க நாங்கள் விட மாட்டோம். மக்கள் சுதந்திரமாக சிந்திக்கவும், எழுதவும் சுதந்திரத்தை வலுப்படுத்த விரும்புகிறேன். எதிர்கருத்துகளை சகித்துக்கொள்ளவும, இடம் அளிக்கவும் எனது அரசு தயாராக உள்ளது. இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு. சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, ஜனநாயக குடியரசு ஆகும். உங்கள் சுதந்திரத்தை வலுப்படுத்த நான் உறுதி அளிக்கிறேன்.இலங்கையில் வசிக்கிற ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட்டது. 2016-க்கு பின்னர் இப்படி சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடியது இதுவே முதல் முறை ஆகும். தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை. 2015-ல் அங்கிருந்த சிறிசேனா அரசு, நல்லிணக்கத்தை அடைவதற்கான வழிமுறையாக தேசிய கீதத்தை தமிழிலும் இடம்பெறச்செய்தது.

இலங்கை அரசியல் சாசனம், தேசிய கீதத்தை தமிழிலும், சிங்களத்திலும் பாடுவதற்கு வழிவகை செய்துள்ளது. அதை மீறும் வகையில் இலங்கை சுதந்திர தினத்தில் நேற்று சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com