சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் - அமெரிக்கா அதிரடி

சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் ரஷியாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

ரஷியா- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதாகவும், உளவுத்துறை ரகசியங்களை உக்ரைனுடன் பகிர்ந்து கொள்வதாகவும் அமெரிக்கா மீது ரஷியா குற்றம் சாட்டி வருகிறது. இதனால் இரு நாடுகளின் உறவுகளிலும் சுமுக நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்தது. ரஷியா ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த பகுதியில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததால் கோபமடைந்த ரஷியா அதனை சுட்டு வீழ்த்தியது. இதற்கு அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவை அழைத்து சர்வதேச ஒப்பந்தத்தை ரஷியா மீறி உள்ளதாக அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்தது.

ரஷிய போர் விமானத்துடனான மோதலுக்குப் பிறகு ஒரு அமெரிக்க டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஆனால் ரஷியா தரப்பில் தாங்கள் எந்த டிரோனையும் சுட்டு வீழ்த்தவில்லை என கூறி இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் ரஷியாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாய்ட் ஆஸ்டின், "இந்த நடவடிக்கை சர்வதேச வான்வெளியில் ஆக்கிரமிப்பு, ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற செயல்களின் ஒரு பகுதியாகும். எனவே எந்த தவறும் செய்யாதீர்கள், சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் அமெரிக்க டிரோன் தொடர்ந்து பறக்கும் மற்றும் செயல்படும். மேலும், பாதுகாப்பான மற்றும் தொழில்முறை முறையில் ராணுவ விமானமாக செயல்படுவது ரஷியாவின் கடமையாகும்" என்று அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com